Nagaratharonline.com
 
காரைக்குடியில் தொடர் வழிப்பறி அதிகரிப்பால் பெண்கள் அச்சம்  Nov 16, 11
 
சில வாரங்களாக காரைக்குடி, அதன் சுற்றுப் பகுதிகளில் டூ வீலர்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து "பைக்' திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். பர்மாகாலனி, சுப்பிரமணியபுரம், வைரவபுரம் புறநகர் பகுதிகளில் பூட்டிக் கிடக்கும் வீட்டை நோட்டமிட்டு போலீசாருக்கு சவால் விடும் வகையில் மர்ம கும்பல் நகை, பணத்தை திருடி வருகிறது.

நேற்று முன்தினம் கண்டனூர் ரோட்டில் தனியாக நடந்து சென்ற மீனாட்சி என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை அதே பைக் திருடர்கள் வழிப்பறி செய்து தப்பியோடினர். அன்று இரவு பர்மாகாலனி, தந்தை பெரியார் நகர் 6 வது வீதியில் வசிக்கும் சம்பந்தம் குடும்பத்தோடு இரவு 7 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள மருத்துவ மனைக்கு சென்று 8 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் பீரோவிலிருந்த 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

காரைக்குடி முத்துப்பட்டணத்தை சேர்ந்தவர் சாத்தப்பன். இவரது பூர்வீக வீடு பள்ளத்தூர் கிழமேல் வீதியில் உள்ளது. வீடு எப்போதும் பூட்டி இருக்கும். கடந்த 6ம் தேதி, இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்த 12 அறைகளின் கதவை உடைத்து 4 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். அடுக்கடுக்காக நடக்கும் திருட்டு சம்பவங்களால் சில நாட்களாக மாலை நேரங்களில் வீட்டை விட்டு பெண்கள் வெளியே நடமாடமுடியாமல் அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கும் நிலை உள்ளது.


source : Dinamalar