Nagaratharonline.com
 
தேவகோட்டை அருகே கோவில் சிலைகள் சேதம்  Sep 27, 11
 
தேவகோட்டை, செப். 25: தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடியில் உள்ள கருப்பர் கோவில் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கும்மங்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கருப்பர் கோவிலுக்கு கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப் பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு இந்தக் கோவிலில் இருந்த கருப்பர், சின்ன கருப்பர், காளியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்ட ஆறு சிலைகள் உடைக்கப்பட்டும் பெயர்த்து எறியப்பட்டும் உள்ளன.
மேலும் கோவில் பெயர் கொண்ட பலகையும் உடைக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலுக்கு இணைக்கப்பட்டிருந்த மின்சார பலகையும் துண்டிக்கப்பட்டு இருந்தது. காலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தேவகோட்டை ஏ.எஸ்.பி சமந்த் ரோகன் ராஜேந்திரா சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து கிராம மக்களிடம் விசாரித்தபோது, இங்கு பல சமூக மக்கள் இருப்பதாகவும், நடைபெறவுள்ள ஊராட்சித் தேர்தலில் ஆறு பேர் வரை போட்டியிட உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் சார்பில் கட்டியுள்ள இந்தக் கோவிலை சேதப்படுத்துவதன் மூலம் மக்களிடைய வேற்றுமையை ஏற்படுத்த நினைத்து இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் புகார் கூறினர்.

Source:Dinamani