Nagaratharonline.com
» All
» Chettinad Toursim
» Chettinad Temples
Chettinad Temples
     

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

 

கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.  முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?


கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.


சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.


அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்)  பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.  வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.


சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !


ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.


சரவணபவ தத்துவம்


சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6  ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.


உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).


மு  - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.


ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.


ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?


ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.


நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :


1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.


ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?


ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு


ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.


ஆறுபடை வீடுகளும் ஆறு  குண்டலினிகளாக விளங்குகின்றன.


திருப்பரங்குன்றம் - மூலாதாரம்


திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்


பழனி - மணிபூரகம்


சுவாமிமலை - அனாஹதம்


திருத்தணிகை - விசுத்தி


பழமுதிர்சோலை - ஆக்ஞை.


ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.


ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.

 

Source:Dinamalar