Nagaratharonline.com
 
ரகசிய கேமரா வைத்தால் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கம்  Oct 5, 16
 
ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் இணைய தளங் களில் வைரலாக இன்னும் உலவுகின்றன. எனவே ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல் ஆகியவற்றுக்கு செல்பவர்கள் உஷாராக இருக்கும் படி சென்னை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, தியாகராய நகர் உதவி ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறும்போது, “சட்ட விரோதமாக ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டி ருந்தால் புகார் தெரிவிக்கலாம். உள் நோக்கத்தோடு ரகசிய கேமரா பொருத்தி வாடிக்கையாளர்கள், பணியாளர்களை படம் பிடித்தால் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல்கள் ஆகியவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கண்டுபிடிப்பது எப்படி?

ஹோட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது ஆள் காட்டி விரலை வைக்க வேண்டும். இப்போது விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள்காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. இல்லையேல், அது கண்ணாடிக்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘இரு பக்க’ கண்ணாடியாகும். கண்ணாடிக்கு பின்னால் இருந்துகொண்டு அறையில் நடப்பதை பார்க்க முடியும்.


ஹோட்டல்களில் தங்கும் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும். தொடர்ந்து அதை ஓடவிட்டுப் பார்த்தால் எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்பது உறுதி.

விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்.

ரகசிய கேமராக்கள் கதவு கைப்பிடி, கடிகாரம், சுவிட்ச், சுவிட்ச் போர்டு, பல வகை லைட் வடிவம், அலங்கார விளக்கு, பொம்மை, குளியல் அறை லைட், ஷவர், வாட்டர் ஹீட்டர், பூந்தொட்டி, திரைச் சீலை, வரவேற்பறை மாடல்கள், போர்டுகள் என எந்த வடிவங்களிலும் இருக்கலாம்.