Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரியில் பேச்சுவார்த்தை மூலம் கைவிடப்பட்டது போராட்டம்  Aug 21, 16
 
மேலைச்சிவபுரியில் ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து சனிக்கிழமை நடத்த இருந்த பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் சமாதானக் கூட்டம் மூலம் கைவிடப்பட்டது.

பொன்னமராவதியிலிருந்து மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி வழித்தடத்தில் மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இயங்க உரிமம் பெற்றுள்ள தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அவ்வழித்தடத்தில் உரிய முறையில் இயக்கப்படவில்லை எனக்கூறி சிபிஎம் கட்சியினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் பேருந்துகளைச் சிறைபிடிக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மோகன்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உரிமம் பெற்றுள்ள வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க ஒப்புக் கொண்டனர். எனவே பேருந்து சிறை பிடிக்கும் போராட்டம் கைவிடப்பட்டது. சிபிஎம் ஒன்றிய செயலர் பி. ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் க. ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் சி. ஜீவானந்தம், ஊராட்சித் தலைவர் பழனியப்பா பெரியகருப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.