Nagaratharonline.com
 
பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி : சந்தனக் காப்பில் தட்சிணாமூர்த்தி  Aug 3, 16
 
,பட்டமங்கலம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மூலவர் தட்சிணாமூர்த்தி,கோபுரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சந்தனக் காப்பில் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவக்கிரகங்களில் பூர்ண சுப கிரகணமான குரு நேற்று காலை 9.27 மணிக்கு சிம்மராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியானார். ஒராண்டு காலம் இந்த ராசியில் சஞ்சரிப்பார். குருபெயர்ச்சியை முன்னிட்டு, கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலமான பட்டமங்கலம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஜூலை 31ல் சிறப்பு யாகம் நடந்தது.

நேற்று காலை குருப்பெயர்ச்சியானவுடன்
மூலவருக்கும், ராஜகோபுரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தட்சிணாமூர்த்தி சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலமரத்தடியில் எழுந்தருளிய உருவத்தில் உற்சவருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பக்தர்கள் அதிகாலை முதல் பட்டமங்கலத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று பகவானை தரிசித்தனர். சிறப்புத் தரிசன வசதியின்றி அனைத்து பக்தர்களும் ஒரே வரிசையில் தரிசனத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் அ.வீர.ராம. வீரப்பச்செட்டியார் செய்திருந்தார்.