Nagaratharonline.com
 
NEWS REPORT: கண்டவராயன்பட்டியில் துணை சுகாதார நிலைய கட்டடங்களை திறக்கக் கோரிக்கை  Jul 3, 16
 
கண்டவராயன்பட்டியில் பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வுக்கென 5 ஆண்டுகளுக்கு முன் ரூ. 5 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆனால், இக்கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்குத் திறக்காததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்போது, இச்சுகாதார மையம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இது குறித்து, பொது சுகாதாரத் துறையினரிடம் விசாரித்தபோது, அக்கட்டடத்தில் மின்சார வசதியும், தண்ணீர் வசதியும் இன்னும் செய்யப்படவில்லை. மேலும், அக்கட்டடம் எங்கள் துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறினர். இப்பிரச்னை குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, அதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்.

இக்கட்டடங்களை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.