Nagaratharonline.com
 
மாடுகள் தங்கும் இடமாக மாறும் ATM.... காவல் போட்டு பஸ் ஸ்டாண்டை காக்கும் பேரூராட்சி  Oct 12, 15
 
காரைக்குடி கல்லூரி சாலை, வ.உ.சி.,ரோடு, செக்காலை ரோட்டில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மாடுகளை வளர்ப்போர் அவற்றை ரோட்டில் திரிய விடுவதால், இரவு நேரங்களில் கடைகளின் முன்புறமும், வீடுகளின் முன்பும் படுத்து கிடக்கின்றன. மறுநாள் காலையில் வணிகர்கள் அதை கழுவி விட்ட பின்னரே தங்கள் கடைக்குள் நுழைய முடியும். கடந்த ஆண்டு காரைக்குடி ரஸ்தா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முற்பட்ட 10-க்கும் மேற்பட்ட மாடுகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தன.
பாலிதீன் பைகள், கழிவு பொருட்களை மாடுகள் சாப்பிடுவதால் அதன் கழிவு துர்நாற்றம் கடை வரைக்கும் வீசுகிறது.
பள்ளத்தூர் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில் ஊரில் திரியும் அனைத்து மாடுகளும் சங்கமித்து விடுவதால், காலையில் இதற்காக தனி துப்புரவு பணியாளரை நியமிக்க வேண்டிய நிலை <உள்ளது. தற்போது அப்பேரூராட்சியினர் தனி காவலாளியை நியமித்து இரவு நேரங்களில் மாடுகளை விரட்டி வருகின்றனர்.
காரைக்குடியில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது. மழைக்காலம் நெருங்கியுள்ளதால் வங்கி ஏ.டி.எம்.,களை மாடுகள் இருப்பிடமாக மாற்றி வருகின்றன.
கண்டனூரில் உள்ள ஒரு முன்னணி வங்கி ஏ.டி.எம்.மில் இரவு நேரம் செல்லும் மாடுகள் அங்கு தங்கி விடுவதால் பணம் எடுக்க செல்வோர் உள்ளே செல்ல முடிவதில்லை. ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து <உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.