Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் வாரச் சந்தை நாள்களில் மின்நிறுத்தம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்  Jul 6, 15
 
பொன்னமராவதியில் மின்சார வாரியத்தின் மாதாந்திர பழுதுநீக்கும் பணியை வாரச்சந்தை நாள்களில் தவிர்த்து மற்ற நாள்களில் செய்ய வர்த்தகர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வர்த்தகர் கழகத் தலைவர் எஸ்.கே.எஸ். பழனியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொன்னமராவதி பேரூராட்சியை சுற்றி நூற்றுக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் பொன்னமராவதியையே நாடி வரும் சூழ்நிலை உள்ளது. அதிலும் இந்த மக்கள் பொன்னமராவதியின் வாரச்சந்தை நாள்களான செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு மட்டும் கடைகளுக்கு வந்து பொருள்கள் வாங்குவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக வாரச்சந்தை நாளான சனிக்கிழமை மின்சார வாரியத்தின் மாதாந்திர பழுது நீக்கும் பணி செய்யப்படுகிறது.

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். எனவே, வாரச்சந்தை நாள்களான செவ்வாய், சனிக்கிழமை மற்றும் விஷேச நாள்கள் தவிர்த்து மற்ற நாள்களில் பழுதுநீக்கும் பணியை செய்து வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும், இதுகுறித்து மின்சார வாரிய உதவி செயற்பொறியாளருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.