Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் வீட்டு கதவை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு  Jun 22, 15
 
கீழச்சிவல்பட்டியில் வீட்டு கதவை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி காவல்நிலையம் பின்புறம் உள்ள மு.அழ.வீதியில் சொக்கலிங்கம் செட்டியார் என்பவரது வீடு உள்ளது. இவர் ஜூன் 13 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு கோட்டையூரில் உள்ள அவர் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தில் சென்று தங்கி வேலை பார்க்க சென்று விட்டார். இதற்கிடையே இவரது மனைவி சாரதா ஊட்டியில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்று விட்டாராம். ஞாயிற்றுக்கிழமை சொக்கலிங்கம் செட்டியார் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே பீரோ மற்றும் கதவுகள் உடைத்து திறக்கப்பட்ட நிலையில் கிடந்தன. இதுகுறித்து போலீஸாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். கைரேகை நிபுணர் டி.எஸ்.பி.பிரதாப்ராஜ் தலைமையில் வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அப்போது சாமி அறையில் இருந்த சுமார் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் மட்டும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆனால் பழைய பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடர்கள் கண்ணில் படாததால் அவை தப்பின. இதுகுறித்து சொக்கலிங்கம் செட்டியார் கொடுத்த புகாரின் பேரில் கீழச்சிவல்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.