Nagaratharonline.com
 
NEWS REPORT: காசிக்கு பச்சைக்காவடி (தேனிமலை செட்டியார்) தலைமையில் 28 பேர் கொண்ட குழுவினர் பாதயாத்திரை  May 8, 15
 
 
வலையபட்டியைச் சேர்ந்த பச்சைக்காவடி (தேனிமலை செட்டியார்) தலைமையில் 28 பேர் கொண்ட குழுவினர் ஏப்.25ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து காசிக்கு பாதயாத்திரை தொடங்கினர்.

உலக நன்மைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு 12 -வது ஆண்டாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

தென்முனையிலுள்ள ராமேசுவரத்தில் தொடங்கி வடமாநிலத்தில் சுமார் 2,510 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காசியை நோக்கி 120 நாட்கள் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டைக்கு வெள்ளிக்கிழமை வந்த யாத்திரைக் குழுவின் தலைவர் பச்சைக்காவடி கூறியதாவது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தில் உள்ள அனைவருமே கட்டாயம் பொருளீட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதுபேல பொருளீட்டி வரும் குடும்பங்களில் குடும்பச் சச்சரவுகளுக்கு குறைவே இல்லை. நாட்டில் தர்மம் மறைந்து அதர்மம் தலைதூக்கியுள்ளது. ரத்த பாசம், சொந்த பந்தம் போன்ற உறவுகள் தேய்ந்து வருகிறது. எவருமே அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியாத சூழலே நிலவுகிறது.

இந்த நிலை மாற வேண்டியே நாங்கள் காசிக்கு யாத்திரை செல்கிறோம். கடந்த ஏப். 24-ம் தேதி ராமேசுவரத்தில் ராமநாதசுவாமியை வழிபட்டுவிட்டு யாத்திரையைத் தொடங்கினோம். வரும் ஆகஸ்ட். 26 -ம் தேதி காசி விஸ்வநாதரை தரிசிக்க திட்டமிட்டு செல்கிறோம்.

சுமார் 30 பேர் கொண்ட எங்கள் குழு யாத்திரை சென்று ஊர் திரும்ப சுமார் ரூ. 8 லட்சம் வரை செலவாகும். இதை பக்தர்களிடம் இருந்து பெற்று பயன்படுத்துகிறோம் என்றார்.