Nagaratharonline.com
 
உ.சிறுவயல் : வீட்டில் தீப்பிடித்து தேக்கு மரப்பொருள்கள் நாசம்  Nov 25, 14
 
 
உ.சிறுவயல் விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் அருணாசலம் செட்டியார் (60). இவர் வட்டித்தொழில் செய்து வருகிறார். இவரது வீடு சுமார் 15 அறைகளைக் கொண்ட நகரத்தார் வீடு. இவரது மகன் காரைக்குடியில் வசித்து வருகிறாராம்.

அருணாசலம் செட்டியார் தனது மனைவியுடன், அருகே அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக செவ்வாய்க்கிழமை காலையில் சென்றாராம். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டிலிருந்து புகை வருவது தெரிந்தது. வீட்டைத் திறந்து பார்த்ததில் 2-ஆவது அறையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், காரைக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தேவகோட்டை, திருப்பத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், விலை உயர்ந்த தேக்கு மரத்தூண்கள், ஜன்னல்கள், பீரோ மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின் கசிவின் காரணமாக தீ பிடித்திருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து குன்றக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.