Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார்கள் கட்டிய சிங்கப்பூர் முருகன் கோயில் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பு  Oct 21, 14
 
சிங்கப்பூரிலுள்ள 155 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில், அந்நாட்டின் 67ஆவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம், அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் 3ஆவதாக இடம் பெறும் கோயில் இதுவாகும்.

இதுகுறித்து சிங்கப்பூர் தேசிய பாரம்பரியச் சின்னங்கள் வாரியம் கூறுகையில், "வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலானது சமூக, கலாசாரத்தைப் போற்றும் விதமாகவும், கட்டடக் கலையில் தனித்துவத்துடனும் விளங்குகிறது' என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இந்தக் கோயில் கடந்த 1859ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்டது. பின்னர் 1980ஆம் ஆண்டு மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, 1983ஆம் ஆண்டில் நிறைவு பெற்றன. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர், 2009ஆம் ஆண்டில் மீண்டும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தக் கோயிலில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தக் கோயிலின் மூலவர், முருகன், சுப்ரமணியன், ஸ்ரீ தண்டாயுதபாணி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.