Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னைக்கு வயது  Aug 21, 14
 
375 ஆண்டுகள் பழைமையான சென்னை நகரத்தின் பெருமையை நினைவுகூரும் வகையில், வெள்ளிக்கிழமை (ஆக.22) சென்னை தினம் ("மெட்ராஸ் டே') கொண்டாடப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகவும் பழைமையான நகரங்களில் ஒன்றான சென்னை, மதராஸப்பட்டணம் என்றே அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டு வந்துள்ளது. மீன்பிடித் துறைமுகக் கிராமமான இந்தப் பகுதி, 1200-ஆவது ஆண்டுகளில் தொண்டை மண்டலத்துக்குள்பட்ட பகுதியாக விளங்கியது.

வங்காள விரிகுடாவின் எல்லையில் இந்நகரம் அமைந்துள்ளதால், மன்னராட்சி காலத்திலேயே இங்கு கடல் வழி வாணிபம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்தியாவின் செல்வச் செழிப்பைக் கண்டு 17-ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள், தங்கள் வியாபார நிறுவனமான கிழக்கிந்தியக் கம்பெனியை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியில் நிறுவினர்.

பிறகு, இதனை ஆட்சி புரிந்த தர்மலா வெங்கடகிரி நாயுடு என்ற நாயக்க மன்னரிடமிருந்து இந்தப் பகுதிகளை விலைக்கு வாங்கினர். வெங்கடகிரி நாயுடுவின் தந்தையான சென்னப்ப நாயுடுவின் பெயரை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பகுதி "சென்னைப் பட்டணம்' என அப்போது அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாளடைவில், செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமையிடமாக்கப்பட்டு, அருகே இருந்த திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருமயிலை (மயிலாப்பூர்) ஆகிய கிராமங்களை பிரிட்டிஷார் ஒன்றிணைத்தனர். அப்போது அந்தப் பகுதி "ஒயிட் டவுன்' என அழைக்கப்பட்டது.

தொடர்ந்து, மற்றப் பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை நகரம் (மெட்ராஸ் சிட்டி) உருவாக்கப்பட்டது. இதை, நினைவுகூரும் விதமாகவே ஆகஸ்ட் 22-ஆம் தேதி "சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது.

மெட்ராஸ் மாகாணம், 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு என அறிவிக்கப்பட்டது.

1996-ஆம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயரும் மாற்றப்பட்டு, சென்னை என அழைக்கப்பட்டது.