Nagaratharonline.com
» All
» Interview
» Article
Article
     
This article source is located at
 
 
Author:முனைவர் மு. பழனியப்பன்
 
செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக் கொண்டு
அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு
வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர்.
புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 96 ஊர்களைத்
தங்களின் இருப்பிடமாகக் கொண்ட இவர்கள் தற்போது செட்டிநாட்டில் எழுபத்தைந்து
ஊர்களிலும், தமிழகம் முழுவதிலும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வணிகத்தை
முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித் தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள்
தற்போது மருந்து வணிகம், தாள்வணிகம் முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும்
தமிழும் தழைத்தினிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின்
பேச்சு வழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர்கள் கருதுகின்றனர். இவர்களின்
முறைப் பெயர்கள் அனைத்தும் தமிழடியானவை. அம்முறைப் பெயர்களை மட்டும் எடுத்துக்
கொண்டு ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒவ்வொரு இனக் குழுவினரிடமும்
அவர்களின் முறைப் பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில்
இடம் பெறும் முறைப் பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னை
விட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்
பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று
முறைப்பெயர்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப்பெயர்கள்
குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற
நிலையில் பகுத்துக் காண இயலுகின்றது.


 

பொதுப்பெயர்கள்


நகரத்தார் மரபு ஆண்களை - செட்டியார் என்றும்; நகரத்தார் என்றும்
பெண்களை - ஆச்சி என்றும் பொதுப் பெயரிட்டு பிற குலத்தார் அழைக்கின்றனர்.
இவர்களுக்குள்ளும் இப்பொதுப்பெயர் நிலவி வருகின்றது. அம்மாள் என்று மற்ற குலங்களில்
அழைக்கப் பெறும் பெண்பால் பொதுப்பெயர் இக்குலத்தில் ஆச்சி என அழைக்கப் பெறுவது
தனித்தன்மை உடையதாக இருக்கின்றது. செட்டியார், நகரத்தார் என்ற ஆண்பாற்பெயர்கள்
அவர்களின் குலம் குறித்தமைந்த பெயர்களாகும். ஆனால் ஆச்சி என்ற பெண்பாற்பெயர்
பெண்களுக்கு வழங்கப் பெறுவது வரலாற்று அடிப்படையானது ஆகும்.

ஒருகாலத்தில்
வணிக குல ஆண்களுக்குப் பெண்கள் கிடைக்காத சூழலில் அவர்கள் வெள்ளாள(வேளார்) குலப்
பெண்களை திருமணம் செய்து கொண்டனர். அவ்வகையில் கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த
வணிகர்கள் அரிவை நகரத்தார் எனப்பட்டனர். சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்தவர்கள்
நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்பட்டனர். காணிய வேளாளப் பெண்களை மணந்தவர்கள் சுந்தர
நகரத்தார் எனப்பட்டனர். பெண்களை இவ்வாறு குலம் மாறி எடுத்துக் கொண்டாலும் இவர்கள்
அடுத்த வாரிசுகளில் எம்குலப் பெண்களை வெள்ளாளக் குலத்திற்குத் தரமாட்டோம் என்ற
உறுதியோடு இவர்கள் அப்போது பெண் கொண்டனர்.

இப்படி வேற்று ஆயத்தில் இருந்து
பெற்ற பெண் என்ற குறிப்பை உட்கொண்டு வேற்று ஆயத்தாள் என்ற பெயர் அப்பெண்களுக்கு
வழங்கப் பெற்று ஆச்சி என்று மருவி வந்திருக்கலாம் என்பது ஒருவகை. காலப்போக்கில்
மருத நில மக்களான வேளாண் குலத்தவரே முல்லை நிலத்தார் செய்யும் தொழில்களான மாடு
வளர்த்தல், பால் தயிர் விற்றல் முதலான தொழில்களைச் செய்து வந்ததால் ஆயர்,
ஆய்ச்சியர் என்ற முல்லை நிலப்பெயர்கள் மருத நிலத்தார்க்கு வழங்கப்பட அக்குலம் சார்
பெண்களைப் பெற்றதனால் நகரத்தார் வேளாளப் பெண்களை ஆச்சி என அழைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு நகரத்தார் குலப்பெண்கள் ஆச்சி எனப்பட்டிருக்கலாம் என்பது இன்னொரு வகை.
எவ்வகையாயினும் ஆச்சி என்ற பொதுப் பெயர் நகரத்தார் இனத்துப் பெண்களுக்கான தனித்த
பெயராக வழங்கி வருவது கருதத்தக்கது.



 

குடும்பப் பெயர்கள்


இவர்களின் குலத்தில் குடும்பப் பெயர்கள் மிகவும் எளிமையான
கட்டமைப்புடையது. காரண காரியம் மிக்கது. ஒரே அமைப்புடையது. அவற்றில் சில பெயர்கள்
இங்குக் காட்டப் பெற்று அவற்றின் பொதுமைகள் ஆராயப் பெறுகின்றன.

தந்தை-
அப்பச்சி எனவும், தாய்- ஆத்தாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். மகன், மகள்
பெயர்களில் மாற்றம் இல்லை. மகனின் மனைவி- மகம்மிண்டி(மகன் பெண்டிர்) என
அழைக்கப்பெறுகிறாள். பெண்டிர் என்ற சொல் பெண் பெயர்களுக்கான பின்ஒட்டு ஆகும்.
பெண்டிர் என்றால் பெண் எனப் பொருள்படும். இச்சொல் மரியாதைப் பன்மை கலந்த
சொல்லாகும். எனவே பெண்களை மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இக்குலத்தாரிடம் உள்ளது
என்பதை உணர முடிகின்றது. மகளின் கணவர்- மாப்பிள்ளை/ மருமகன் எனப்படுகின்றார். இவை
போல பின்வரும் பெயர்களும் காணத்தக்கன.

அண்ணன்- அண்ணன், அண்ணன் மனைவி-
அண்ணமிண்டி(அண்ணன் பெண்டிர்), தம்பி- தம்பி, தம்பி மனைவி- தம்பியொண்டி(தம்பி
பெண்டிர்), பேரன்-பேரன், பேரன் மனைவி- பேரம்பிண்டி(பேரன்பெண்டிர்), மாமா-அம்மான்,
மாமா மனைவி- அம்மாம்மிண்டி(அம்மான் பெண்டிர்), அத்தை-அயித்தை, அத்தை மகள்-
அயித்தியாண்டி( அத்தையாள்பெண்டிர்), கணவனின் தம்பி,அண்ணன் ஆகியோர்-கொழுந்தனார்-
கொழுந்தனாவண்டி(கொழுந்தனார் பெண்டிர்) என்பன ஒரே அமைப்பிலானது. இவற்றில் பெண்டிர்
என்ற சொல் அதன் முன்சொல்லுக்கு ஏற்றார் போல், மிண்டி, யாண்டி, யொண்டி, மிண்டி ஆகிய
ஈறுகளாகப் பேச்சு வழக்கில் திரிந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இன்னும் சில
குடும்பப் பெயர்கள் வேறு அமைப்பில் உள்ளன. அம்மாவைப் பெற்ற அம்மா- ஆயா எனவும்,
அப்பாவைப் பெற்ற அம்மா- அப்பத்தா (அப்பனைப் பெற்ற ஆத்தாள்) எனவும் அழைக்கப்
பெறுகின்றனர். அப்பா, அம்மா இருவரையும் பெற்ற தாத்தா- ஐயா என்றே பொதுப் பெயரால்
அழைக்கப் பெறுகிறார்.

மாமானார்-சம்பந்தியான், மாமியார்-சம்பந்தியாள் என்பன
எதிர் உறவு முறையினரைக் குறிக்கும் பெயர்களாகும். இவை தவிர மற்றொரு பெண்ணின்
கணவனைக் குறிக்கையில் ஆம்பிடையான் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதும்
உண்டு.

கணவனும், மனைவியும் -ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கையில் ஏங்கறேன்
என்ற பேச்சு வழக்கு நகரத்தார் மரபில் காணப்படுகிறது. ஏன் என்கிறேன் என்ற சொல்லின்
திரிபாக இதனைக் கொள்ளலாம்.


 


மகனுக்கு அவனின்
தந்தை வழி தாத்தா (ஐயா) பெயரிடப்படுகையில், அதனை அவனின் அம்மா (ஆத்தாள் ) அழைப்பது
மரியாதைக் குறைவு எனக் கருதி நகரத்தார் பெண்கள் அழைப்பதில்லை. மாறாக தம்பி என்றோ,
வேறு ஒரு பெயர் கொண்டோ அழைப்பது முறைமையாக உள்ளது. அது போலவே அப்பத்தா பெயரை
மகளுக்கு இடுகையில் அதனை அழைப்பதும் மரியாதைக் குறைவு என்பதால் வேறு பெயர் கொண்டோ
அல்லது ஆத்தாள் என்றோ அழைப்பதும் முறைமையாகும்.

இதே போல இரண்டாவது மகன்,
மகள் பிறக்கையில் மாமானார், மாமியார் பெயர் சூட்டப்படுகையில் அதனை அழைப்பது
மரியாதைக் குறைவு எனக் கருதுவதால் கணவனும் வேறு பெயர் இட்டு அழைப்பதும் வழக்காக
உள்ளது. எனவே நகரத்தார் குல எல்லாப் பிள்ளைகளுக்கும் இரு பெயர்கள் இருப்பது
தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இவ்விரு பெயர்களும் திருமண அழைப்பிதழ் முதலாக
பதிவு பெற வேண்டிய இடங்களில் பதியப் பெறுகின்றன என்பது குறிக்கத்
தக்கது.

அண்ணன் என்ற சொல் நகரத்தார் மக்களிடையே பேச்சு வழக்கில் அதிகம்
பயன்படும் சொல்லாகும். வயதில் மூத்த ஆண்களை அண்ணன் என்பது பொது வழக்காகும். வயதில்
குறைந்த ஆண்களை தம்பி என்றழைப்பதும் பொதுவழக்காகும். வயதில் மூத்த பெண் பிள்ளைகளை
ஆச்சி என அழைப்பதும், வயதில் குறைந்த பெண் பிள்ளைகளை தங்கச்சி என்றழைப்பதும் பொது
வழக்கிற்கு உட்பட்டதே ஆகும். இவ்வழக்குகள் செட்டிநாட்டுப் பகுதிகளில் வாழும் பிற
இனத்தாரிடத்திலும் காணப் பெறுகின்றன.

மனைவியுடன் பிறந்த ஆண்- மச்சான்,
மைத்துனன் என அழைக்கப்படுவதும், கணவனுடன் பிறந்த பெண்கள் நாத்தனார் எனப்படுவதும்,
பிற குலத்தினரால் அழைக்கப்பெறும் பான்மைதான்.

மேலும் முறையினர் பலராக
இருக்கும் போது அவர்களை வயது அடிப்படையில் பெரிய, சிறிய என்ற அடைகளுடன் அழைக்கும்
முறை இவர்களிடம் காணப் பெறுகின்றது. எடுத்துக்காட்டிற்காக சின்ன (சிறிய) ஆயா, பெரிய
ஆயா; சின்ன ஆத்தாள், பெரிய ஆத்தாள் முதலியனவற்றைக் காட்டலாம்.


 



நெருங்கிய உறவினர்


பெரியப்பா, சித்தப்பா போன்ற தந்தை வழிப்பட்ட நெருங்கிய உறவினர்கள்
வளவினர் எனப்படுகின்றனர். வளவு என்பது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள்
அனைவரும் ஒரு வளைவிற்குள் வாழ்ந்தனர் என்ற அடிப்படையில் உருவான வளைவு என்ற சொல்லே
பின்னர் வளவு என மருவியது என்பர் . இதனடிப்படையில் தந்தை வழிப்பட்ட நெருங்கிய
உறவினரைக் குறிக்கும் சொல் வளவினர் ஆயிற்று.

தாய் வழிப்பட்ட நெருங்கிய
உறவினர் தாயபிள்ளைகள் என அழைக்கப் பெறுகின்றனர். பெரும்பான்மை இச்சொல் தாய்
வழிப்பட்ட உறவினரைக் குறித்த போதும் - சிறுபான்மை தந்தை உறவினர்க்கும்
உரியதாகின்றது. தாயபிள்ளைகள் என்ற இச்சொல் தூய தமிழ் அடிப்படையில் அமைந்த காரண
காரியமிக்க இணைப்புச் சொல்லாகும். இச்சொல் பங்காளிகள் அல்லாத உறவுமுறையினர்க்கு
உரியதாகும்.


தூரத்து உறவினர்


தூரத்து உறவினர் பங்காளிகள் எனப்படுகின்றனர். இவர்களுள் சில வகைகள்
உண்டு. அவை பங்காளிகள், கோயில் பங்காளிகள், ஊர் பங்காளிகள், கூடிக் கொள்கின்ற
பங்காளிகள் என்பனவாகும்.


பங்காளிகள்


பங்காளிகள் என்போர் தந்தை வழியில் உறவு முறையினர் ஆவர். இவர்கள்
திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும்
முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் இக்குல முறையினரிடம்
நடைபெறாது என்பது குறிப்பிடத் தக்கது.


கோயில் பங்காளிகள்


கோயில் பங்காளிகள் என்போர் கோயில் உறவால் உறவினர் ஆவோர் ஆவர்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் சார்ந்த குடிகள் ஆவர். இவர்கள் ஒன்பது நகரக்
கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவனர் ஆவர். அவை இளையாற்றங்குடி, மாற்றூர்,
நேமம், இரணியூர், பிள்ளையார்பட்டி, இலுப்பைக்குடி, சூரைக்குடி, வைரவன் கோயில்,
வேலங்குடி என்பனவாகும். இச்சிவன் கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவாகியுள்ள
இக்குலத்தார், இவர்களுக்கான பூர்வீக ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். பல ஊரினர்
ஆனாலும் கோயில் அடிப்படையில் இவர்களிடத்தில் உறவு உண்டு. இவ்வுறவே கோயில்
பங்காளிகள் என்னும் உறவாகின்றது.


ஊர் பங்காளிகள்


ஓரூர் சார்ந்த நகரத்தார்கள் தம்மை ஓரூர் பங்காளிகள் எனப் பெருமையோடு
அழைத்துக் கொள்கின்றனர். வெளியூர்களில் வேலையில் அமர்ந்த நகரத்தார் பெருமக்கள் ஊர்
சார்ந்து ஒருமைப்படுவதற்கு இம்முறை பெரிதும் உதவுகின்றது. வழி, வழி மரபாக வாழ்ந்த
இவ்வூர் இணைப்பு தவிர, வாழும் ஊர்களிலும் இம்முறை தொடர்கின்றது. எடுத்துக் காட்டாக
கோயம்புத்தூரில் வாழும் பல ஊர் நகரத்தார்கள் ஒன்று சேர்ந்து நகரத்தார் சங்கம் என்ற
அமைப்பைத் தங்களுக்குள் அமைத்துக் கொள்ளும் போது அவர்கள் கோயில், மரபு தாண்டி
மற்றொரு உறவுமுறைக்குள் நெருக்கமாகின்றனர். இவ்வுறவுமுறையே தற்போது பெருமளவில்
வெற்றி பெற்றுத் திகழ்கின்றது. நகரத்தரார் சங்கங்கள் மூலமாக உலக அளவில் கூட பல
ஊர்களில் நகரத்தார்கள் ஒருங்கிணைகின்றனர். இச்சங்கங்கள் மூலமாக அவர்கள் பல
அறப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றனர்.

இவ்வாறு கூட்டம்
கூட்டமாக- வளவு அடியாகவும், கோயிலடியாகவும், மரபூர் அடியாகவும், வாழும் ஊர்
அடியாகவும் வாழும் முறைமை இச்சமூகத்தாரின் இனக் கட்டுமானத்திற்கு இன உணர்விற்கு
எடுத்துக் காட்டாகின்றது. எனினும் இவர்களின் இனஉணர்வு மென்மையானது, மேன்மையானது
என்பதும் இங்கு எண்ணத்தக்கது.


 



புள்ளி


புள்ளி என்ற இச்சொல் நகரத்தார் மரபில் மிகவும் பொருளுள்ளது ஆகும்.
திருமணமான நகரத்தார் ஆண் பிள்ளை ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப் பெறுகின்றார். இதன்
பின் இவர் ஊர்ப் பொதுக் காரியங்களுக்கான புள்ளிவரி கட்ட வேண்டும். திருமணம் முதலான
நிகழ்ச்சிகளில் தனிக் குடும்பமாகக் கருதப்பட்டு அவர் பெயருக்கு அழைப்பு தரப்பெறும்.
அவர் பெயரில் மொய்ப்பணம் பெறப்பெறும். இவ்வகையில் புள்ளி என்பது இவர்கள் குலத்துள்
மிகப் பொருளுள்ளதாகின்றது.

புள்ளிக்குரிய ஆண் இறந்த சூழலில், அவரது மனைவி
வாழும் நிலையில் அவர் அரைப் புள்ளியாக கருதப்பட்டு அவரிடம் வரிப்பணம் முதலியன
அரையளவில் பெறப் பெறுகின்றன. மனைவி இறந்து கணவர் மட்டும் இருக்கும் சூழலில் அவர்
ஒரு புள்ளியாகவே கருதப்படுகிறார். சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள்
இப்புள்ளி என்னும் நிலைக்கு வாரார் என்பது இங்கே கருதத்தக்கது.

இவ்வாறு
நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபினர் தமக்கென தனித்த தமிழ் வழிப்பட்ட காரண காரியமிக்க
இன உணர்வுடைய முறைப் பெயர்களை அமைத்துக் கொண்டு தம் பண்பாட்டை நாகரீகத்தை குலமரபைக்
காத்து வருகின்றனர்.



*****